Tuesday 16 April 2013

பெண்களின் விவாகரத்து உரிமை



கணவனைப் பிடிக்காத நிலையில் ஒரு மனைவி அவனிடமிருந்து பிரிந்து மறு வாழ்வு அமைத்துக் கொள்ள இஸ்லாம் பல உரிமைகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று தான் குல்உ எனப்படுவதாகும்.

இந்தச் சட்டம் மத்ஹபுகளில் இருந்தாலும் கூட மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்வோர் இதை நடைமுறைப் படுத்துவதில்லை.

ஒரு பெண் தன் கணவரோடு வாழப் பிடிக்காமல் தன்னைப் பிரித்து வைக்குமாறு அந்தப் பகுதியின் ஜமாஅத்தாரிடம் முறையிட்ட போது, அவர்கள் ஹனபி மத்ஹபின் படி கணவன் தலாக் விட்டால் தான் பிரிய முடியும் என்று கூறி மறுத்து விட்டனர்.  அந்தப் பெண் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி மார்க்கத் தீர்ப்பு பெற்று கணவனைப் பிரிந்தார். ஆயினும் கணவன், நான் தலாக் விடவில்லை என்பதால் என் மனைவி என்னோடு தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது கணவன், மனைவி இருவரும் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விவாக ரத்து உரிமை சமுதாயத்தில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாமல் இருப்பதால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிட்டுள்ளோம். எனவே இந்த குல்உ எனப்படும் பெண்களின் விவாக ரத்து உரிமையைப் பற்றி இங்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

குல்உ என்றால் என்ன?

1. ஒரு பெண்ணுக்குத் தனது கணவனைப் பிடிக்கவில்லை என்றால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடமோ அல்லது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்தால் ஆட்சித் தலைவரிடமோ முறையிட வேண்டும்.

2. அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராகப் பெற்ற பொருட்கள் அனைத்தையும் கணவனிடம் திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.

3. அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளைப் பிரிந்து விடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படா விட்டாலும் தலைவர் அந்தத் திருமணத்தை ரத்து செய்வார்.

4. மஹராகக் கொடுத்ததை விட எதையும் அதிகப்படியாக கணவன் கேட்க முடியாது.

5. கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை.

6. கணவனே தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்துக்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை இருப்பதைப் போல் குல்உ செய்து பிரியும் போது திரும்ப அழைக்க முடியாது.

7. தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய் வரை அவள் மறு மணம் செய்யக் கூடாது. ஆனால் குல்உ அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய் வரும் வரை அவள் மறுமணம் செய்யக் கூடாது. அதன் பிறகு அவள் மறுமணம் செய்யலாம்.

8. இவ்வாறு பிரிந்த பின் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இவை தான் குல்உ என்பதன் விதிமுறைகளாகும். முஸ்லிம் பெண்களில் 

பெரும்பாலோருக்கும், சமுதாயத் தலைவர்களுக்கும் இந்தச் சட்டங்கள் தெரியாததாலும், கல்லானலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற போலித்தனத்தில் அவர்கள் ஊறிப் போய் விட்டதாலும் பெண்கள் இன்று கொடுமைப் படுத்தப் படுகின்றனர்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி "சரி'' என்றார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் "தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி),
நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, "அவள் உமக்குத் தர வேண்டியதை(மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!'' என்றார்கள். அவர் "சரி'' என்றார். அப்பெண்மணியிடம் "ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ருபய்யிஃ(ரலி)
நூல்: நஸயீ 3440

இந்த ஹதீஸ்களில் அந்தப் பெண்மணி தன் கணவரைப் பற்றி எந்தக் குறையையும் கூறவில்லை. மாறாக அவரது நடத்தையையும், நற்பண்புகளையும் புகழ்ந்தே கூறுகின்றார். தான் கணவரை விட்டுப் பிரிய விரும்புவதற்கு எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைவனுக்கு மாறு செய்து விடுவேனோ என்று அச்சமாக உள்ளதையே காரணம் காட்டுகின்றார்.

கணவனைப் பிடிக்காது பிரிந்து செல்ல விரும்பும் மனைவி தெளிவான காரணம் எதையும் கூற வேண்டியதில்லை என்பதையும், தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினாலே போதுமானது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

கணவன் தலாக் கூறினால் தான் குல்உ நிறைவேறும் என்று சிலர் கூறுகின்றர். ஆனால் இது ஏற்கத்தக்கதல்ல.

கணவனால் கொடுமை படுத்தப்படும் பெண் அவனிடமிருந்து பிரிய விரும்புகின்றாள். இந்த நிலையில் அவன் மறுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் தலாக் விட்டால் தான் அவள் பிரிய வேண்டும் என்றால் காலமெல்லாம் அவள் கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கொடுமைகள் நிகழும் போது அதைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ள தலைவரும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து பெண்களுக்கு அக்கிரமம் செய்யப்படுவதை இஸ்லாம் அனுமதிக்குமா? அநியாயத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்துப் போராடுமாறும் முடியுமானால் கையால் தடுக்க வேண்டும் எனவும் கூறும் இஸ்லாம் இந்த அக்கிரமத்தை அனுமதிக்குமா? இந்தக் கோணத்தில் பார்த்தாலும் குல்உ என்பதற்கு அந்தக் கணவனின் சம்மதமோ, அவனது தலாக்கோ தேவையில்லை என்பது தெளிவாகின்றது.

இஸ்லாம் திருமணத்தை ஒரு ஒப்பந்தம் என்று கூறுகின்றது.

"உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?''
(அல்குர்ஆன் 4:21) 

"பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன''
(அல்குர்ஆன் 2:228)

திருமணத்தை முறித்துக் கொள்ள கணவனுக்கு இருப்பது போன்று மனைவிக்கும் உரிமை இருப்பதை இந்த வசனங்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. கணவன் தலாக் விட்டால் தான் அவள் பிரிய முடியும் என்றால் பெண்ணுக்கு இந்த உரிமை வழங்கப் பட்டதில் என்ன அர்த்தமிருக்க முடியும்?

இது போன்ற காரணங்களால் கணவன் தலாக் கூறினால் தான் அவளால் பிரிய முடியும் என்பதை ஏற்க முடியவில்லை. எவ்வளவு பெரிய இமாம்கள் அந்தக் கருத்தைக் கூறியிருந்தாலும் அதைத் தூக்கி எறிய வேண்டியது தான்.

பெரும் மார்க்க அறிஞர்கள் எனப்படும் பலரும் இந்த விஷயத்தில் சறுக்கியுள்ளனர். பெண்களின் நிலையிலிருந்து சிந்தித்தால் இதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

குல்உ தொடர்பான மற்ற ஆதாரங்களைக் காண்போம்.

இப்னு மாஜாவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் 2332வது ஹதீஸில், "அவரது தோட்டத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதை விட அதிகமாகப் பெற்றுக் கொள்ளக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

கொடுத்த மஹரை விட வேறெதனையும் அந்தக் கணவன் கேட்க முடியாது. தலைவரும் வற்புறுத்த முடியாது என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.

"ஒரேயடியாக அவளைப் பிரிந்து விடு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து திரும்ப அழைக்கும் உரிமை கணவனுக்கு கிடையாது என்பதும் தெளிவாகின்றது.

ஆக பெண்கள் தங்கள் கணவனிடமிருந்து பிரிவதாக இருந்தால் ஜமாஅத்தில் முறையிட வேண்டும்.  ஜமாஅத் தலைவர் அந்தத் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண் சார்பு நிலையிலிருந்து ஜமாஅத்தினர் விடுபட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைச் செயல்படுத்த வேண்டும்.

கணவனைப் பிடிக்காமல், பிரியவும் வழி தெரியாமல் வாழ வெட்டிகளாகப் பிறந்த வீட்டில் கண்ணீர் வடிக்கும் அபலைப் பெண்களின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும். இஸ்லாம் வழங்கியுள்ள இந்த உரிமையை மறுப்பதன் மூலம் அவர்கள் விபச்சாரம் போன்ற தகாத உறவுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு நியாயத்தை மறுத்த மொத்த சமுதாயமும் அந்தக் குற்றத்தில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

கணவன் தலாக் விடாத வரை அந்த உறவை ரத்துச் செய்ய முடியாது என்று அஞ்சும் ஜமாஅத் தலைவர்களுக்காக ஒரு முக்கியமான ஹதீஸைச் சமர்ப்பிக்கிறோம்.

அப்துல்லாஹ்வுடைய மகள், ஸாபித் என்பாருக்கு மனைவியாக இருந்தார். அவர் அப்பெண்ணுக்கு ஒரு தோட்டத்தை மஹராக வழங்கியிருந்தார். (அந்த வழக்கு வந்த போது) "உனக்கு அவர் தந்துள்ள தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்கிறாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "ஆம். அதை விட அதிகமாகவும் கொடுக்கிறேன்'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதிகமாக வேண்டாம். அவரது தோட்டத்தை மட்டும் கொடு'' என்றார்கள். அப்பெண் சரி என்றதும், ஸாபிதின் சார்பாக நபி (ஸல்) அவர்களே தோட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு ஸாபிதுக்குத் தெரிய வந்த போது, "அல்லாஹ்வின் தூதருடைய தீர்ப்பை நான் ஏற்கிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஸ்ஸுபைர்
நூல்: தாரகுத்னீ 39

கணவனின் தலாக்கைப் பெறாமல் நபியவர்களே மஹரைப் பெற்றுக் கொண்டு ரத்து செய்கின்றார்கள். இந்தச் செய்தி சம்பந்தப்பட்டவருக்கே பிறகு தான் தெரிகின்றது என்றால் ஜமாஅத் தலைவருக்கு உள்ள உரிமையையும் கடமையையும் தெளிவாக அறிய முடிகின்றது.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையினால் மாற்றார்கள் இஸ்லாத்தை விமர்சிப்பது ஒரு புறமிருக்க, நமது சமுதாயத்துப் பெண்களில் விபரமறிந்தவர்களும் இஸ்லாத்தை விமர்சிக்க இடமளித்து விடக் கூடாது.

பெண்களுக்கு உள்ள இந்த உரிமையைப் பெண்கள் அறிவதற்கு ஏற்பாடு செய்வதும் ஜமாஅத் தலைவர்களுக்கு இந்தச் சட்டம் பற்றி விளக்குவதும் தவ்ஹீத் சகோதரர்களின் கடமைகளில் ஒன்றாகும்.

பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படா விட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.

கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.

பெண்கள் ஸ்டவ் வெடித்துச்  செத்தால், விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். நன்றாகத் தான் படுத்தார். காலையில் பிணமாகி விட்டார் என்று கூறப்படுவதில் கனிசமானவை மனைவியரால் செய்யப்படும் கொலைகளாகும். சமையல் அவர்கள் கையில் இருப்பதால் எளிதாகக் கதையை முடிக்கிறார்கள்.

அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, தனக்கு விருப்பமானவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.

எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது.

ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts